இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

பிரண்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரண்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 மே, 2021

பிரண்டை

 

          மூலிகைப் பெயர்....................... ....................பிரண்டை

          மாற்றுப் பெயர்............................... ........வச்சிரவல்லி,

          தாவரவியல் பெயர்,,,...CISSUS QUADRANGULARRIS

          ஆங்கிலப் பெயர்..............  ......CISSUS, VELD GRAPES

          சுவை.....................................................................கார்ப்பு

          தன்மை...............................................................வெப்பம்

 

===================================================

 

 

01.  பிரண்டை என்பது சதைப் பற்றான நாற்கோன வடிவத் தண்டுகளை உடைய ஏறு கொடி. (Harish)

 

02.  பிரண்டையானது பற்றுக் கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும். சிவப்பு நிற உருண்டையான சிறிய  சதைக் கனி உடையது. (Harish)

 

03.  பிரண்டையின் வேர் தண்டு ஆகியவை மருத்துவப் பயன் உடையவை. சாறு உடலில் பட்டால் நமைச்சல் ஏற்படும். (Harish)

 

04.  உருட்டுத் தண்டுகளை உடைய பிரண்டையும் உண்டு. இவ்வகைக்கு மூங்கிற் பிரண்டை அல்லது கோப்பிரண்டை என்று பெயர். (Harish)

 

05.  பிரண்டை குடல் வாயு அகற்றல், பசி மிகுத்தல், நுண்புழுக் கொல்லுதல் ஆகிய செய்கைகளை உடையது. (Harish)

 

06.  பிரண்டையில் கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின் சி ஆகிய சத்துகள்  உள்ளன. (Harish)

 

07.  பிரண்டை எலும்பு முறிவைக் குணமாக்கும்; எலும்புப்புரையை ( Osto porosis ) சரிசெய்யும்; மாதவிடாயை  ஒழுங்கு படுத்தும்; செரிமானத்தைச் சரி செய்யும்; குன்மம், மூலம் ஆகியவற்றைக் குணப்படுத்தும். (Harish)

 

08.  பிரண்டைத் துவையல் செரியாமையை நீக்கிப் பசியைத் தூண்டும். (Harish) (290) (297) (2013)

 

09.  பிரண்டைச் சாற்றில் புளி, உப்பு கலந்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் பற்றுப் போட்டால், சதைப் பிறழ்ச்சி, அடிபட்ட வீக்கம், எலும்பு முறிவு வீக்கம், எலும்பு முறிவு ஆகியவை தீரும். (Harish)

 

10.  பிரண்டை வேரை உலர்த்தி பொடித்து ஒரு கிராம் அளவாகக்  காலை மாலை கொடுத்துவர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும். (Harish) (1451)

 

11.  பிரண்டைப் பொடி ஒரு தேக்கரண்டி எடுத்து அத்துடன் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்தவுடன் ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டும், 50 மி.லி காய்ச்சிய பாலும் கலந்து தினமும் அருந்தி வர, எலும்புகள் பலப்படும். இதனை எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்குக் கொடுத்துவர, வலி குறையும். சீக்கிரத்தில் எலும்புகள் கூடும்.[ குறிப்பு:- பிரண்டைச் சாறு உடலில் பட்டால் நமைச்சல் ஏற்படும். ஆதலால் இதனை சுண்ணாம்பு கலந்து தெளிந்த நீரில் ஊறவைத்து, காய்ந்த பிறகு எடுத்துக் கொள்வதே சிறந்தது ] (Harish)

 

12.  பிரண்டைத் தண்டுகளை நார் நீக்கித் துவையல் செய்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் செரியாமை நீங்கும். (Harish)

 

13.  நெருப்பில் வாட்டி எடுத்த பிரண்டைத் துண்டுகளைச் சாறு பிழிந்து, அத்துடன் மஞ்சள் தூள், புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் குழம்புப் பதத்தில் கிளறி, காய்ச்சி, அடிபட்ட வீக்கம், சதைப் பிடிப்பு, சுளுக்கு, எலும்பு முறிவு ஆகியவற்றிற்குப் பற்றுப்போட நல்ல பலன்கிடைக்கும். (Harish) (1449)

 

14.  களிப் பிரண்டையுடன் மிளகு, உப்பு சேர்த்து, துவையல் செய்து அருந்தி வந்தால், பிணியினால் நொந்த உடல் வலிமை பெறும். (Harish)

 

15.  சுண்ணாம்பு நீரில் ஊறவைத்துக் காய வைத்த பிரண்டைத் துண்டுகளை எடுத்து ஒன்று அல்லது இரண்டு துண்டுகளைச் சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். (Harish)

 

16.  பிரண்டையைத் தீயில் வாட்டிப் பிழிந்த சாற்றை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட்டால், காது வலி தீரும். மூக்கில் விட்டால், மூக்கில் வடியும் இரத்தம் நிற்கும். (Harish)

 

17.  முற்றிய பிரண்டைத் துண்டுகளை நார் நீக்கி, மோரில் உப்பு கலந்து ஊற வைத்து நன்கு உலர்த்தி எடுத்து வற்றலாக எடுத்து வைத்துக் கொண்டு எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் சுவையின்மை, பசியின்மை தீரும். (Harish)

 

18.  தீயில் வாட்டி எடுத்த பிரண்டையை, ஒரு தேக்கரண்டி எள் எண்ணெய் கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டால் ஒழுங்கற்ற மாதவிடாய் தீரும். (Harish)

 

19.  பிரண்டையை நன்கு காய வைத்து, சாம்பலாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு கிலோ சாம்பலை மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீரில் கரைத்து அரை நாள் வரைத் தெளிய வைக்க வேண்டும். பின்பு தெளிந்த நீரைஒரு பாத்திரத்தில் ஊற்றி, நீர் வற்றும் வரை வெயிலில் வைத்து, பின்பு பாத்திரத்தில் படிந்திருக்கும் உப்பை எடுத்துக் கொள்ளவும். இதுவே பிரண்டை உப்பு ஆகும். (Harish)

 

20.  மூலம், ஆசனவாய் எரிச்சல் மற்றும் கடுப்பிற்கு பிரண்டை உப்பை இரண்டு கிராம் அளவு வெண்ணெயில் கலந்து ஒரு மண்டலம் (48 நாள்) இரண்டு வேளை கொடுதது வர தீரும். (Harish)

 

21.  இரண்டு கிராம் பிரண்டை உப்பை நெய்யில் கலந்து இரண்டு வேளை கொடுத்தால் வலி குறையும். பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கு, சூதகக் கடுப்பு குணமாகும். (Harish)

 

22.  பிரண்டை ஒரு பசியைத் தூண்டக் கூடிய மூலிகையாகும். (Harish) (1448)

 

23.  (ஆதாரம்: வேலூர், ஸ்ரீ.சேஷா சாய் ஹெர்பல்ஸ் மருத்துவமனை, முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ. ஹரிஷ் அன்புச் செல்வன் M.D (s), அவர்கள், 15-04-2017 நாளிட்ட தினமலர் நாளிதழின் இணைப்பான பெண்கள் மலரில் எழுதிய கட்டுரை.)

 

24.  பிரண்டையை நெய் விட்டு வதக்கித்  துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நல்ல பசி எடுக்கும்; மூலநோய் வராது; இரத்தக் கழிச்சல் தீரும்.  (360) (1143)

 

25.  பிரண்டை எண்ணெய் நெற்றியில் தேய்த்தால்  தலைவலி குணமாகும். வெட்டுக் காயம் விரைவாக ஆறும்.  (416)

 

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )12]

{26-05-2021}

===================================================


பிரண்டை

பிரண்டை

பிரண்டை

பிரண்டை