இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

அத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

அத்தி.

                           மூலிகைப் பெயர்..........................................அத்தி

              மாற்றுப் பெயர்கள்........................அதம், அதவு 

               ................................................கோளி, உதும்பரம்

              தாவரவியல் பெயர்.............FICUS GLOMERATA

              ஆங்கிலப் பெயர்.....................................FIG TREE

              சுவை...........................................................துவர்ப்பு

              தன்மை......................................................குளிர்ச்சி

 

==================================================


1)     மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு மர வகையைச் சேர்ந்த்து அத்தி.  பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய்க்கும்.

 

2)     அத்தியின் இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியவை மருத்துவப் பயன் உடையவை.

 

3)     அத்தி மரப் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.

 

4)     அத்திப் பால் 15 மி.லி யுடன் வெண்ணெய் சர்க்கரை கலந்து, காலை மாலை கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறு நீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

 

5)     அத்திப் பாலை எடுத்து மூட்டு வலிகளுக்குப் பற்றுப் போட்டு வந்தால்  விரைவில் வலி தீரும்.

 

6)     முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப்பனைக் கிழங்கு, பூமிச் சர்க்கரைக்  கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த பொடியில் 5 கிராம் எடுத்து 5 மி.லி அத்திப் பாலைக் கலந்து, காலை மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது (விந்து) வளர்ச்சியைக் கொடுக்கும்.

 

7)     அத்திப் பழத்தை உலர்த்தி இடித்துப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி காலை மாலை பாலில்  உட்கொள்ள  இதயம் வலுவாகும். இரத்தம் பெருகும்.

 

8)     அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டையை எடுத்துக் காய்ச்சிய குடிநீர் காலை மாலை குடித்துவர, தீராத பெரும்பாடு தீரும்.

 

9)     அத்திப் பிஞ்சு, வேலம் பிஞ்சு, மாம்பட்டை, சிறு செருப்படை ஆகியவற்றை சமனெடை எடுத்து வாழைப் பூச் சாற்றில் குடிநீரிட்டுக் கொடுத்தால் வயிற்றுக் கடுப்பு, சீதக் கழிச்சல் முதலியன போகும்.

 

10)  அத்திப் பிஞ்சையும் காயையும் சமைத்து உண்ணலாம். இவ்வாறு உண்டு வந்தால் வெள்ளை, வாத நோய், சூலை, உடல் வெப்பு, புண் ஆகியவை போகும்.

 

11)  அத்திப் பட்டையை பசுவின் மோர் விட்டு இடித்துப் பிழிந்து, ரசத்தை காலை மாலை 100 மி.லி வீதம் கொடுத்து வந்தால் பெரும்பாடு நிற்கும்.

 

12)  அத்தி மர வேரிலிருந்து இறங்கும் கள்ளில், வெல்லம் பேயன்  வாழைப் பழத்தோடு விடியற்காலையில் உட்கொள்ள எலும்பைப் பற்றிய மேகம், உட்சூடு, பித்த மயக்கம், நீர்வேட்கை தீரும்.

 

13)  அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும். சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.

 

14)  அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதபேதி, இரத்தபேதி ஆகியவை தீரும்.

 

15)  அத்திப் பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரைகளாக உருட்டிவைத்துக் காலை மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக்கடுப்பு, மூலவாயு, இரத்தமூலம், வயிற்றுப்போக்கு தீரும்.

 

 

16)  அத்திப்பழத்தை அப்படியே காலை மாலை சாப்பிட்டு பால் அருந்தலாம். பதப்படுத்தி -5 நாட்கள் நிழலில் காயவைத்து- தேனில் போட்டு சாப்பிடலாம். உலர்த்திப் பொடி செய்து சூரணமாக 10-15 கிராம் பாலில் போட்டு சாப்பிடலாம். தாது விருத்திக்குச் சிறந்ததாகும். ஆண்மை ஆற்றல் பெறும். ஆண் மலடும் அகலும்.

 

17)  அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும். அடிமரத்தின் கீழ் வேறைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தென்னை, பனை, பாளையில் பால் சுரக்கும். இதன் வேரில் பால் சுரக்கும். தெளிந்த இந்த நீரை நாளும் 300-400 மி.லி. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேகநோய் போகும். நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்ப்பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும்.

 

18)  இதன் அடிமரப்பட்டையை இடித்துச் சாறெடுத்து 30-50 மி.லி.குடித்து வர பெரும்பாடு, குருதிப் போக்கு குணமாகும். மேக நோய், புண் குணமாகும், கருப்பை குற்றம் தீரும். பட்டையைக் கசாயமிட்டு அருந்தலாம்.

 

19)  அத்தி மரத்தின் துளிர் வேரை அரைத்து 10 கிராம் பாலில் சாப்பிட நீர்தாரை எரிச்சல், சூடுபிடித்தல் குணமாகும். உடல் வெப்பம் குறையும். மயக்கம், வாந்தி குணமாகும். உலர்த்தி சூரணமாகவும் சாப்பிடலாம்.

 

20)  அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச்செய்து சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும். பூண்டு, மிளகு, மஞ்சள் கூட்டில் சேர்க்க வேண்டும். பொரியலாகவும் சாப்பிடலாம்.

 

21)  அத்திமரத்தின் பூவில் சாறு எடுத்து தினசரி 2 வேளைகள் வீதம் மூன்று நாட்கள் கண்களில் விட்டுக் கொண்டால் கண் பார்வை தெளிவாகும்.(021)

 

22)  அத்தி மரத்தின் இலைகளை தனியாகவோ அல்லது உணவு முறையாகவோ உண்டு வந்தால், உதட்டுப் புண், வாய்ப் புண் ஆகியவை குணமாகும்.(261)

 

23)  அத்திமரக் கொழுந்து, ஆலமரக் கொழுந்து, அரச மரக் கொழுந்து மூன்றையும் நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி சர்க்கரை, மற்றும் பால் சேர்த்து அருந்தி வந்தால், இரத்தபேதி (இரத்த மலப் போக்கு) குணமாகும்.(368)

 

24)  அத்திக் காயை உட்கொண்டு வந்தால் உதட்டு வெடிப்புகள் குணமாகும்.(1180)

 

25)  அத்திப் பிஞ்சு, பருத்திப் பிஞ்சு, சாதிக்காய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து மோரில் கலந்து கொடுத்தால் அம்மை நோய் குணமாகும்.(1013)

 

26)  அத்திப் பழத்தை முறையாக தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.(485)

 

27)  அத்திப் பழத்தை உலர்த்திப் பொடிசெய்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் காலை மாலை பாலில் கலந்து அருந்தி வந்தால் இதயம் வலுவாகும். இரத்தம் ஊறும்.(561)

 

28)  அத்திப் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், பெரும்பாடு தீரும். மாதவிடாய் வயிற்று வலி குணமாகும்.(719)

 

29)  அத்திப் பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடல் வலிமை பெறும்.((741)

 

30)  அத்திப் பழம் ஒரு நாளைக்கு ஐந்து வீதம் உட்கொண்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.(1200)

 

31)  அத்திப் பாலை எடுத்துப் பற்றுப் போட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.(309)

 

32)  அத்திப் பாலை எடுத்து புரையோடிய புண் மீது தடவி வந்தால் புண் விரைவாக ஆறும்.(1161)

 ===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !  


      -----------------------------------------------------------------------------------------


      ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

      -----------------------------------------------------------------------------------------


அத்திப்பழம் 

அத்தி