இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

உத்தாமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உத்தாமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

உத்தாமணி.

 

                   மூலிகைப் பெயர்...............................உத்தாமணி

                   மாற்றுப் பெயர்கள்.....................வேலிப் பருத்தி

                   ......................உத்தம கன்னிகை, உத்தம மகாணி

                   தாவரவியல் பெயர்..................DAEMIA EXTENSA

                   சுவை...............................................................கைப்பு

                   தன்மை.........................................................வெப்பம்

                   செய்கை...கோழையகற்றும், புழுக்கொல்லும்,    

                   .................................................வாந்தி உண்டாக்கும்

 

 =================================================

 

01.    இதய வடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிறப் பூங் கொத்துக்களையும், மென்மையான முட்களைக் கொண்ட காய்களையும் உடைய பால் உள்ள பிசு பிசுப்பான ஏறுகொடி. காய்கள் முறுக்கு மீசையின் எதிரெதிர் பக்கங்கள் போல் அமைந்து இருக்கும்.

 

02.    முட்டை வடிவ விதைகளில் பட்டுப் போன்ற பஞ்சிழைகள் காணப்படும். பஞ்சு காற்றில் பறந்து சென்று விதைகள் மூலம் இனப் பெருக்கம் செய்கிறது.

 

03.    உத்தாமணிக் கொடியின் இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயன்கள் உடையவை.

 

04.    உத்தாமணிக்கு வாந்தி உண்டாக்குதல், கோழை அகற்றுதல், முறை நோய் நீக்குதல், இசிவு போக்குதல் ஆகிய குணங்கள் உள்ளன..

 

05.    மண்புழு போன்ற தோற்றமளிக்கும் சிறு பாம்பின் கடிக்கும், அரிப்பு, தடிப்பு போன்றவைகட்கும் உத்தாமணி இலைச் சாற்றைத் தடவலாம்.

 

06.    உத்தாமணி இலையை வதக்கித் துணியில் கட்டி ஒற்றடம் கொடுக்க, கீல் வாதம் (மூட்டு வலி), முடக்கு வாதம், வாதக் குடைச்சல், இடுப்பு வலி முதலியன குணமாகும்.

 

07.    உத்தாமணி இலைச் சாற்றுடன் சுக்கு பெருங்காயம் பொடித்துக் காய்ச்சி, இளஞ்சூட்டில் பற்றுப் போட்டால் வாத வலி, வீக்கம் குணமாகும்.

 

08.    உத்தாமணி இலையைப் பறித்து மைய அரைத்து அந்த விழுதைப் பிளவைகளுக்கு வைத்துக் கட்டலாம்

 

09.    உத்தாமணி இலையின் குடிநீரை. ஒரு தேக்கரண்டி அல்லது ஒரு சங்கு அளவு குழந்தைகட்குப் புகட்ட, வயிற்றிலுள்ள புழு வெளிப்படும்.

 

10.    உத்தாமணிச் சாற்றில் சிறிதளவு உப்பும், வசம்பு சுட்ட கரியும் சேர்த்து மண் சட்டியில் இட்டுக் காய்ச்ச, உப்பு சுண்டி வெளுத்துப் பொடியாகும். இப்பொடியை சிறிது எடுத்து சிறு குழந்தைகட்கு வரும் மாந்தம், அள்ளு மந்தம், செரியாக் கழிச்சல் முதலிய நோய்களுக்கு, 25 மி.லி வெந்நீரில். கலந்து புகட்ட, நோய் நீங்கும்.

 

11.    உத்தாமணி இலைகளை அரைத்து இரண்டு தேக்கரண்டி சாறு எடுத்து சம அளவு தேன் கலந்து உள்ளுக்குக் கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்.(177)

 

12.    உத்தாமணிச் சாறுடன் சிறிது சுண்ணாம்பு கலந்து தடவி வந்தால் கை, கால் வீக்கங்கள் சரியாகும்.(573)

 

13.    உத்தாமணி இலை, வல்லாரை இலை இரண்டையும் எடுத்து நிழலில் உலர்த்தி, பொடித்து ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் சாப்பிட பெரும்பாடு வலி தீரும்.(585)

 

14.    உத்தாமணிச் சாறு ஒரு சங்கு அளவு எடுத்து, சற்று கொதிக்க வைத்து உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.(659) (1176). இத்துடன் வசம்புச் சுட்ட தூள் சிறிதளவு சேர்த்துக் கொடுத்தால் வயிற்று மந்தம் விலகும்.(659)

 

15.    உத்தாமணி இலைகளை எடுத்துக் கசக்கி அரிப்பு, தடிப்புகளுக்குத் தடவினால் அவை சரியாகும்.(1020)

 

16.    உத்தாமணி இலைகளை எடுத்து சாறு பிழிந்து உடலில் தடவி சற்று நேரம் கழித்துக் குளித்தால் உடலில் ஏற்படும் ஊறல் அரிப்பு குணமாகும்(1027)

 

17.    உத்தாமணி இலை, நொச்சி இலை இரண்டையும் சேர்த்து வதக்கி ஒற்றடம் கொடுத்து வந்தால் இடுப்பு வலி, மூட்டு வலி ஆகியவை தீரும்., (1442)

 

18.    உத்தாமணி இலையை சிறிது வேப்பெண்ணெய் விட்டு வதக்கி ஒற்றடம் கொடுத்து வந்தால் நரம்பு இசிவு கண்டமாலை ஆகியவை குணமாகும்.(1662)

 

19.    உத்தாமணி இலைச் சாற்றில் மிளகை ஊற வைத்து, பின் உலர வைத்து, பொடி செய்து ஒரு துவரம் பருப்பு எடை தேனில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சுரம் மற்றும் சகல நோய்களும் தீரும்.(1699) மாந்த இழுப்பும் குணமாகும்.(1746)

 

20.    உத்தாமணி, பொடுதலை, நுணா, நொச்சி ஆகியவற்றை சம அளவு எடுத்து சற்று வதக்கிப் பிழிந்து எடுத்த சாறினை 10 மி.லி அளவுக்கு உள்ளுக்குக் கொடுத்தால் சளி தீரும்.(1744)

 

21.    உத்தாமணி வேரை எடுத்து நிழலில் உலர்த்தி பொடித்து, இந்தப் பொடியில் நான்கு சிட்டிகை எடுத்து பாலில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் அவர்களது வாயுத் தொல்லை தீரும்.(1713) குடல் பூச்சிகள் ஒழியும் (1728)

 

22.    உத்தாமணி வேரைப் பாலில் அரைத்துக் குடித்தால் நஞ்சு கடியால் ஏற்படும் தொல்லைகள் தீரும்.(1745)


 ===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க ! 

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

==================================================


உத்தாமணி



உத்தாமணிக் காய்

உத்தாமணி