இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

சீரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 மே, 2021

சீரகம்

 

              மூலிகைப் பெயர்..........................................சீரகம்

             மாற்றுப் பெயர்.....................................சீரி, நற்சீரி

             .....................................துத்தலாம்பலம்ஜீராஅசை

              ...................................போசனகுடோரி, மேத்தியம்

              ..................................................ஜிர்கா,,.கொத்த ஜீரா

             ................................பித்த நாசினிசீரகேநற்சீரகம்

             தாவரவியல் பெயர்.............CUMINUM CYMINUM

              ஆங்கிலப் பெயர்...............................CUMIN SEEDS

 =================================================

 

01.   சீரகச்செடி பல கிளைகளுடன் கூடியதாகவும், இலைகள் நீளமாகவும், வெண்ணிற சிறு மலர்களுடனும் காணப்படும். பழங்கள் 7.5 செ.மீ நீளம் இருக்கும். பழத்தின் உள்ளே இருப்பவை தான் சீரகம் என வழங்கப்படும் விதைகள்..

 

02.   சீரகம் மலைப் பகுதிகளில் அதிகம் பயிராகும். விதையானது குறுக்கு வெட்டில் கோள வடிவிலும், 6 மி.மீ நீளத்திலும் பழுப்பு நிறத்திலும் இருக்கும்.

 

03.   சீரகம் இனிப்பு மற்றும் கார்ப்பு கலந்த சுவை உடையதாக இருக்கும். குளிர்ச்சித் தன்மை கொண்டது.

 

04.   சீரகத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய்ப் பொருள், 2-1/2 விழுக்காடு அளவுக்குக் காணப்படுகிறது. சீரகத்தில் இரும்பு, சுண்ணாம்பு, சோடியம், தங்கம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மாங்கனீஸ், வைட்டமின்”, “சி”, கொழுப்பு, தாதுப் பொருட்கள், தையாமின், நார்ச்சத்து, நியாசின், புரதம், மாவுப் பொருட்கள், ரிபோபிளேவின், ஆகிய சத்துக்கள் அடங்கி உள்ளன. (Asan)

 

05.   நீ இதனை உண்டால், உடல் பொன்னாகக் காண்பாய். எட்டுத் திப்பிலி, ஈரைந்து சீரகத்தை தேனில் குழைத்து உண்ண, விக்கல் நின்றுவிடும். அப்படி  நிற்கவில்லை என்றால் நான் தேரையனே அல்லஎன்கிறார் சித்தர் தேரையர்.(Asan)

 

06.   சீரகத்தை பயன்படுத்தும் முறை :சீரகத்தை இரவு முழுவதும் தெளிந்த சுண்ணாம்பு நீரில் ஊற வைத்து, வடிகட்டி, உலர வைத்துப் பயன்படுத்துவது சிறந்தது.(Asan)

 

07.   மோருடன் சீரகம், இஞ்சி, உப்பு சேர்த்துப் பருகி வந்தால், வாயுத் தொல்லை நீங்கும்..(Asan)

 

08.   சீரகத்தை இலேசாக வறுத்து, கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வாருங்கள். நரம்புகள் வலுவடையும்.(Asan)

 

09.   சீரகத்தை மென்று, ஒரு தம்ளர் சுத்தமான குளிர்ந்த நீரைக் குடித்தால் மயக்கம் தீரும். (Asan)

 

10.   வறுத்த சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு, தேவைக்கு ஏற்ப பால் கலந்து பருகி வந்தால், நன்கு பசி ஏற்படும்.(Asan)

 

11.   உடல் மெலிந்தவர்கள் சீரகத்தை, தூள் செய்து, கருப்பட்டி சேர்த்து, இலேகியமாகச் செய்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிக்கும்.(Asan)

 

12.   சீரகத்தை வாழைப் பழத்துடன் சேர்த்து, சாப்பிட்டு வந்தால், எடை குறையும்.(Asan)

 

13.   ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தை பொடித்து வாழைப் பழத்தோடு சேர்த்து, இரவு உறங்குதற்கு முன் சாப்பிட்டால், நன்றாகத் தூக்கம் வரும்; காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த மூலம் தீரும். (Asan)

 

14.   திராட்சைச் சாறுடன், சிறிதளவு சீரகப் பொடி கலந்து சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தம் கட்டுப்படும்.(Asan)

 

15.   சீரகத்துடன் சிறிதளவு ஓமம் போட்டுக் கசாயம் வைத்துக் குடித்தால், வயிற்றுப் போக்கு நிற்கும்.(Asan)

 

16.   சிறிதளவு சீரகத்தைத் தேவையான அளவு நீரில் போட்டுக் கொதிக்க வைத்து, சீரகக் குடி நீர் தயார் செய்யலாம். இதைத் தினமும் பருகி வருபவர்களுக்கு பசி ஏற்பட்டு, செரிமானம் ஒழுங்காகும். கர்ப்பிணிகளுக்கும் ஏற்றது.(Asan)

 

17.   சீரகத்தை சிறிது நீர் விட்டு அரைத்து, களியாகக் கிளறி, கட்டிகளின் மேல் வைத்துக் கட்டினால் வலி, வீக்கம் குறையும்.(Asan)

 

18.   கற்கண்டைப் பொடித்து சீரகப் பொடியுடன் சேர்த்து, தினமும் இரு வேளை சாப்பிடுங்கள். வறட்டு இருமல் தணியும்.(Asan)

 

19.   சீரகம் மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை இலேசாக நெய் விட்டு வதக்கி உண்டால், வாய்ப் புண்கள் குணமாகும்.(Asan)

 

20.   அகத்திக் கீரை, சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து, கசாயம் காய்ச்சிக் குடித்து வந்தால் மனநோய் மறையும்.(Asan)

 

21.   சீரகத்துடன் மூன்று பற்கள் பூண்டு வைத்து அரைத்து, எலுமிச்சைச் சாற்றில் கலந்து குடித்து வந்தால், குடல் கோளாறுகள் விலகும்.(Asan)

 

22.   ஒரு தேக்கரண்டி சீரகத் தூள், ஒரு தேக்கரண்டி வெந்தயத் தூள் இரண்டையும் ஒன்றாகக் கலந்து, அதில் ஒரு தேக்கரண்டி மட்டும் எடுத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்று வலி நீங்கும்.(Asan)

 

23.   சிறிதளவு சீரகம், கைப்பிடி அளவு கீழாநெல்லியை எடுத்து அரைத்து ,எலுமிச்சைச் சாற்றில் கலந்து பருகினால், கல்லீரல் கோளாறு காணாமல் போகும்.(Asan)

 

24.   சீரகம் 5 கிராம், கறிவேப்பிலை 15 கிராம் எடுத்து அரைத்து, உள்ளுக்குச் சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால், வயிற்றுப் போக்கு குணமாகும்.(Asan)

 

25.   சிறிதளவு சீரகத்துடன் வெற்றிலை 2 , நல்ல மிளகு 4 , சேர்த்து மென்று, ஒரு தம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் சீராகும்.(Asan)

 

26.   சீரகம், இந்துப்பு இரண்டையும் சேர்த்து, அரைத்து, சிறிது நெய் விட்டுச் சூடாக்கி, தேனீ கொட்டிய இட்த்தில் பூசினால் நஞ்சு இறங்கும்.(Asan)

 

27.   ஒரு தேக்கரண்டி சீரகப் பொடி, சிறிது வெண்ணெய் இரண்டையும் ஒன்றாகக் கலந்து நெல்லிக் காய் அளவு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குடற்புண் (அல்சர்) குணமாகும்.(Asan)

 

28.   இஞ்சிஎலுமிச்சம் பழச் சாற்றில் சீரகத்தைக் கலந்து, ஒரு நாள் ஊறவைத்து, ஊறிய சீரகத்தை  தினமும் இரு வேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் பித்தம் சரியாகும்.(Asan)

 

29.   சிறிதளவு சீரகம், சிறிதளவு மிளகு இரண்டையும் பொடித்து எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் நீங்கும்.(Asan)

 

30.   சீரகம், மிளகு சம பங்கு எடுத்து பால்விட்டு அரைத்து, தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வாருங்கள். தலை அரிப்பு, பொடுகு, பேன் ஒழியும்.(Asan)

 

31.   ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் 30 கிராம் சீரகம் பொடித்துப் போட்டு, நன்றாகக் காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு,  தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலை - உடல் சூடு, தோல் நோய்கள் மறையும்.(Asan)

 

32.   சீரகம், சுக்கு, மிளகு, கொத்து மல்லி, சிற்றரத்தை ஆகியவற்றைச் சம பங்கு எடுத்து, பொடித்து, வேளைக்கு இரண்டு சிட்டிகை வீதம் தினமும் இரு வேளைகள் சாப்பிட்டு வந்தால், உடலில் அசதி நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.(Asan)

 

33.   சிறிதளவு சீரகத்துடன் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து, பசும் பாலில் கலந்து குடித்து வரும் பெண்களுக்கு வெள்ளைப் படுதல் சரியாகும்.(Asan)

 

34.   நன்கு வறுத்த சீரகத்தை ஒரு தம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு தேக்கரண்டி அளவு தேன் கலந்து மாதவிடாய்க் காலங்களில் கொடுத்தால், வயிற்று வலி சிறிது நேரத்திலேயே குறைந்து விடும்.(Asan)

 

35.   சீரகத்தை மருந்தாகப் பயன்படுத்தும் முன் அதைச் சுத்தப் படுத்திக் கொள்ளவும். (பத்தி 6 காண்க)(Asan)

 

36.   (ஆதாரம்:- நாகர்கோயில், எஸ். மகாலிங்கம் ஆசான், 02-10-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)

 

37.   சீரகம் ஒரு தேக்கரண்டி எடுத்து தூள் செய்து நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி, தலைமுழுகி வந்தால், கண்நோய்கள் குணமாகி, கண்கள் ஒளி பெறும்.(012)

 

38.   சீரகப் பொடியை எடுத்து, முடக்கத்தான் இலைச் சாற்றில் ஊற வைத்து, நன்கு ஊறிய பின் இரண்டொரு துளிகள் காதில் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் குணமாகும்.(061)

 

39.   சீரகத்தைப் பொன் வறுவலாக வறுத்து, பொடி செய்து கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.(147)

 

40.   சீரகம், மிளகு, சுக்கு, திப்பிலி, கடுகு, கடுகுரோகிணி, வேப்பங் கொழுந்து சேர்த்து அரைத்து நிழலில்  உலர்த்தி சிறு மாத்திரைகளாக்கி, காலை, மாலை ஒன்று சாப்பிட்டு வர, கடுமையான ஜலதோஷம் குணமாகும். (164)

 

41.   சீரகம்,  மிளகு இரண்டையும் கானவாழை சமூலத்துடன் சேர்த்து கசாயம் செய்து கொடுத்து வந்தால், தாகம் தணியும்; சுரமும் குணமாகும்.  (192)

 

42.   சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, விளாமிச்சை வேர் இவைகளை தலா ஐந்து கிராம்  எடுத்து அரைத்து பொடியாக்கி காலை, மாலை அரைத் தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தலைச் சுற்றல், தலை, கிறு கிறுப்பு ஆகியவை தீரும்.(275)

 

43.   சீரகத்தை வறுத்து பொடியாக்கி, வாழைப் பழத்தில் தூவிச் சாப்பிட்டால் சுகமான நித்திரை வரும். (276) (1907)

 

44.   சீரகத்தை எலுமிச்சைச் சாறில் ஊறவைத்து, உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொண்டு, வாயில் போட்டு அடக்கி உமிழ்நீரை விழுங்கி வந்தால், குமட்டல் தீரும். (288)

 

45.   சீரகப் பொடி, வில்வப் பட்டைப் பொடி இரண்டையும் சேர்த்து நெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தாது வீரியம் உண்டாகும்.  (487)

 

46.   சீரகத்தைப் பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து, பனை வெல்லத்துடன் சேர்த்து  பிசைந்து சாப்பிட்டு வந்தால் நன்கு பசி எடுக்கும்.(643)

 

47.   சீரகத்தைப் பொன் வறுவலாக  வறுத்து, கொதிக்க வைத்து ஆறிய வெந்நீரில் போட்டு வைக்க  வேண்டும். இந்த நீரைக் குடி நீராகப் பயன்படுத்தினால் உள் உறுப்புகள் சீராகும்.(1980)

 

48.   சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை மூன்றையும் ஒரு தம்ளர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் செரியாமை தீரும்.(666)

 

49.   சீரகத்தை எருமைப் பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வந்தால் பருக்கள் மறையும் (1790)

 

50.   சீரகத்தை வறுத்து பொடி செய்து, மோரில் போட்டு அருந்தி வந்தால், வயிற்று நோய்கள் சரியாகும்.(670)

 

51.   சீரகம், உலர்ந்த மாம்பூ இரண்டையும் சேர்த்து தூள் செய்து சர்க்கரை  சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உஷ்ண பேதி குணமாகும்.(696)

 

52.   சீரகம், கருஞ்சீரகம் இரண்டையும் பொடி செய்து, கறிவேப்பிலை, வெங்காயம், வெள்ளைப் பூண்டு, கிராம்பு ஆகியவற்றை துண்டு துண்டாக  நறுக்கி, அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து தயிருடன் சேர்த்து கலந்து பருகினால் வயிற்று உப்புசம் தீரும்.(700)

 

53.   கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியைப் போட்டு 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் இரத்தக் கொதிப்பு குணமாகும்.(1756) (1756)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )07]

{21-05-2021}

===================================================


சீரகம் 


சீரகம் செடி

சீரகம் செடி

சீரகம் செடி

சீரகம் செடி