இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

திருநீற்றுப்பச்சிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருநீற்றுப்பச்சிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 மே, 2021

திருநீற்றுப்பச்சிலை

 

        மூலிகைப் பெயர்.........................திருநீற்றுப் பச்சிலை

        மாற்றுப் பெயர்கள்.................................உருத்திரச்சடை

        .....................................................பச்சை, சப்ஜா ,பச்சிலை

        தாவரவியல் பெயர்........................OCIMUM BASILICUM

        தாவரக் குடும்பம் ..............................................LABIATAE.

        ஆங்கிலப் பெயர்..........................................SWEET BASIL

        சுவை..........................................................................கார்ப்பு

        தன்மை...................................................................குளிர்ச்சி

 

 ==================================================

 

 

01.   திருநீற்றுப் பச்சிலை செறிந்த மணமுடைய இலைகளையும், வெளிறிய கருஞ் சிவப்பு மலர்க் கதிர்களையும் உடைய சிறு செடியினம்.

 

02.   திருநீற்றுப் பச்சிலை இலைகள் நடுவில் அகன்றும், நுனிகுறுகியும், நீண்டும் இருக்கும். பூக்கள் வெண்மையாக கதிர் போன்று இருக்கும். உலர்ந்த பின்னர் கருப்பு நிறமாக மாறும்

 

03.   திருநீற்றுப் பச்சிலை இலை, விதை ஆகியவை மருத்துவப் பயன் உடையவை.

 

04.   திருநீற்றுப் பச்சிலை வியர்வைப் பெருக்கியாகவும், தாது வெப்பு அகற்றி உடல் தேற்றும் மருந்தாகவும் செயற்படும்.

 

05.   திருநீற்றுப் பச்சிலை இலையை முகர்வதால் தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை நீங்கும்.

 

06.   திருநீற்றுப் பச்சிலை இலைச் சாறு தேன் ஆகியவற்றை சம அளவு கலந்து 30 மி.லி. அளவுக்குக் கொடுத்துவர  மார்பு வலி, மேல்சுவாசம், இருமல், வயிற்று வாயு தீரும்.

 

07.   திருநீற்றுப் பச்சிலை விதை கபத்தைப் போக்கும். இதனால் வயிற்று நோய்கள், சீதக் கழிச்சல், மேகம், நீர் நோய்கள் தீரும்.

 

08.   மேற்கண்ட நோய்களுக்கு நீரில் ஊறவைத்த திருநீற்றுப்பசிலை விதையைச் சர்க்கரையுடன் கலந்து சாப்பிடலாம்.

 

09.   இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் அஸ்ட்ரகால், பூஜினால், தைமால்டேனின் காம்பர் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன.

 

10.   இதன் வேர் வெப்பத்தை உண்டாக்கி வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி வியர்வையை அகற்றும் செய்கை உடையது.

 

11.   இதன் விதை வழுவழப்புத் தன்மையோடு உடலிலுள்ள வெப்பத்தைக் குறைத்துச் சிறுநீரைப் பெருக்கும் செய்கை உடையது. சித்த மருத்துவத்தில் லேகியங்களிலும் தைலங்களிலும் மணத்திற்காக இதனைப் பயன் படுத்துகிறார்கள்.

 

12.   பச்சை இலைகள் இருமல், சளி, உபாதைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சமையலுக்குப் பயன் படுத்தப்படுகிறது, பசியைத் தூண்டுவதற்கும் உறக்கம் உண்டாக்குவதற்கும் உதவுகிறது. வேர், காயங்களைப் போக்கப் பயன்படுகிறது. இதன் எண்ணெய் பூச்சிக் கொல்லியாகப் பயன்படுகிறது.

 

13.   காது வலி, காதில் சீழ் வடிதல் முதலிய நோய்களுக்கு இதன் இலையைப் பிழிந்து சாறு எடுத்து இரண்டு முதல் மூன்று துளி காதில் விட்டு வர காது வலி குறையும்.

 

14.   முகப்பருக்கள் உடையவர்கள் திருநீற்றுப்பச்சிலைச் சாற்றுடன் வசம்புப் பொடியையும் குழைத்து பூசி வர முகப்பரு விரைவில் மறையும்.

 

15.   படை முதலிய சரும நோய்களுக்கு இதன் இலைச் சாற்றை நோய்கண்ட இடத்தில் பூசிவர அவை எளிதில் மறையும்.

 

16.   நாட்பட்ட வாந்தியால் துன்பப்படுபவர்கள் திருநீற்றுப் பச்சிலைச் சாற்றுடன் வெந்நீர் கலந்து அருந்தி வர வாந்தி குறையும்.

 

17.   தேள் கடித்த பின் உண்டாகும் வலிக்கு திருநீற்றுப் பச்சிலைச் சாற்றை கடிவாயின் மீது பூச வேண்டும்.

 

18.   திருநீற்றுப் பச்சிலைச் சாற்றுடன் சம அளவு பால் கலந்து காலை, மாலை என இரு வேளை 100 மி.லி.வீதம் அருந்தி வந்தால் வெட்டை நோய்கள், மேக சம்பந்தமான நோய்கள், பீனிசம், நாட்பட்ட கழிச்சல், உள் மூலம், சிறுநீரக சம்பந்தமான நோய்கள் முதலியவை குணமாகும்.

 

19.   இதன் விதைகள் சர்பத்தில் போட்டு அருந்தும் பழக்கம் உள்ளது. இவை சிறந்த மணமூட்டியாகச் செயல்படுகிறது. இது ஆண்மையைப் பெருக்கும்.

 

20.   திருநீற்றுப் பச்சிலையானது பிரசவத்தின் போது ஏற்படும் வலியைக் குறைக்கும்.

 

21.   ஒரு சிலருக்கு கண் இரப்பையில் கட்டி ஏற்பட்டு வேதனை கொடுக்கும். இந்த சமயம், திருநீற்றுப் பச்சிலையைக் கொண்டு வந்து, கையினால் கசக்கினால் சாறு வரும். அந்தச் சாற்றை கட்டியின் மேல் கனமாகப் பூசிவிட வேண்டும். சாறு காய்ந்த பின் பழையபடி அதன் மேலேயே சாற்றைப் பூசி வர வேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து பூசி வந்தால் கண் கட்டி பெரியதாகக் கிளம்பாமல் அமுக்கி விடும்.

 

22.   சில சமயம் கண் கட்டி பெரிதாகி தானே உடைந்து சீழும் இரத்தமும் வெளியே வரும். சீழும் இரத்தமும் முழுவதும் வெளியே வந்த பின் சுத்தம் செய்து விட்டு, திருநீற்றுப் பச்சிலைச்  சாற்றைப் போட்டு வந்தால் புண் ஆறிவிடும்.

 

23.   திருநீற்றுப் பசிலையைக் கசக்கி,  சாறு பிழிந்து மூக்கில் நுகர்ந்தால் தும்மல் வரும். அப்படித் தும்மல் வரும் போது மூளைக் காய்ச்சலை உருவாக்கும் கிருமிகளும் வெளியே வந்து விடும். (179)

 

24.   திருநீற்றுப் பச்சிலைச் சாறு தும்பைச் சாறு இரண்டையும் கலந்து, அத்துடன் பச்சைக் கற்பூரம் சிறிதளவு சேர்த்து அதை சுவாசித்தால் தலைவலி குணமாகும்.  (401)

 

25.   திருநீற்றுப் பச்சிலை இலைகளைப் பறித்து நன்கு கசக்கி, அடிக்கடி அதை முகர்ந்து வந்தால் தலை பாரம் நீங்கும்.  (412)  தூக்கமின்மை நீங்கும்; நன்கு தூக்கம் வரும். (1277)

 

26.   திருநீற்றுப் பச்சிலை இலையை வாயில் இட்டு மெல்லுவதால் வாய் வேக்காடு தீரும்.  (1364)

 

27.   திருநீற்றுப் பச்சிலை இலையை வாட்டிப் பிழிந்த சாறு இரண்டொரு துளி காதில் விடக் காது மந்தம் தீரும். (073) (1365)

 

28.   திருநீற்றுப் பச்சிலை விதைகளைக் கொதி நீரில் ஊற வைத்துச்  சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.  (1367)  இரத்தக் கழிச்சல் குணமாகும். (1377)  சிறு நீர் எரிச்சல் தீரும் ; வெட்டை நோய் தணியும்.  (1388)

 

29.   திருநீற்றுப் பச்சிலைச் சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் மேல் மூச்சு வாங்குதல், இருமல் ஆகியவை தீரும். (1381)  வயிற்று வாயு தீரும்   (1407)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 

 ==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )08]

{22-05-2021}

 ===================================================


திருநீற்றுப்பச்சிலை


திருநீற்றுப்பச்சிலை

திருநீற்றுப்பச்சிலை

திருநீற்றுப்பச்சிலை