இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

எருக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எருக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

எருக்கு.

                   மூலிகையின் பெயர் ...........................................-: எருக்கு

                வேறு பெயர்கள்..........................அருக்கன். ஆள்மிரட்டி

                தாவரப்பெயர்.............................CALOTROPIS GIGANTEA.

                தாவரக்குடும்பம்..................................ASCLEPIADACEAE.

                ஆங்கிலப் பெயர்....................SWALLOW WORT, MUDAR

        ================================================


01.  எருக்கு, செடி வகையைச் சேர்ந்தது. ஒரு ஆள் உயரத்திற்குக் கூட உயர்ந்து அடர்த்தியாக படர்ந்து வளரும். நிறைய கிளைகள் விட்டு நுனியில் கொத்துக் கொத்தாக மொட்டு விட்டு மலர்ந்து காய்க்கும். அடியிலை பழுத்து மஞ்சள் நிறமாக மாறி கீழே விழுந்து விடும். எருக்கன் செடியின் நுனி முதல் அடிவேர் வரை பால் போன்று நீரோட்டமிருக்கும்.

 

02.  எருக்கன் செடியின் எந்த பாகத்தை ஒடித்தாலும் பால் போல் வெளிப்படும். சில துளிகள் வெளிவந்தவுடன் தானே நின்று விடும். இதன் இலை சாம்பல் நிறத்தில் இருக்கும். 10 செ.மீ. நீளமும் சுமார் 5 - 6 செ .மீ. அகலமும் உடையதாக முட்டை வடிவத்தில் இருக்கும்.

 

03.  வெள்ளெருக்கினை மாந்தீரீக சம்பந்தமான காரியங்களுக்கும் சிலர் பயன் படுத்துகின்றனர்

 

04.  எருக்கு  இலை, காம்பு, கிளை, பூ, வேர், பால் ஆகியவை பயன் தரும் பாகங்கள் ஆகும்.

 

05.  எருக்கு மலர் பூத்துப் பிஞ்சாகி, காயாகி கொத்தாக இருக்கும். சுமார் 7 - 9 செ.மீ. நீளத்துடன் 3 - 4 செ.மீ. கனமுள்ளதாக இருக்கும். நன்கு முற்றிய பின் வெடித்து பஞ்சாக மாறி காற்றில் பறந்து சென்று, விழுந்த இடத்தில் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.

 

06.  எருக்கின் மருத்துவப் பயன்கள்.- இதன் பால் தீ போல சுடும். பட்ட இடம் புண்ணாகும். புழுக்களைக் கொல்லும். விஷக்கடிகளை குணமாக்கும். பயிர்களுக்கு எதிர்ப் பாற்றலைத் தரும். இலை நஞ்சு நீக்கல் வாந்தியுண்டாக்குதல் பித்தம் பெருக்குதல் வீக்கம் கட்டிகளைக் கரைத்து வேதனை குறைதல் ஆகிய குணங்களை உடையது. பூ, பட்டை, ஆகியவை கோழையகற்றுதல் பசியுண்டாக்குதல், முறை நோய் நீக்குதல் ஆகிய பண்புகளையுடையது.

 

07.  காலில் ஆழமாக முள்குத்தி விட்டால், குத்திய இடத்தை சிறிது களைந்து அந்த இடத்தில் எருக்கம் பாலை வைத்து விட்டால் மறு நாள் முள்ளானது எளிதாக வெளியே வந்து விடும்.

 

08.  பாம்பு - தேள் கடி -: எருக்கு  இலையை அரைத்து 5 கிராம் அளவு பாலில் சாப்பிடவும். அரைத்து கடிவாயில் கட்டவும். விஷம் இறங்கும். எலிக் கடிக்குக் கொடுக்கலாம்.

 

09.  குதிங்கால் வலி - :பழுத்த இலையை குதிங்கால் வீக்கத்தின் மீது வைத்து, சுட்ட செங்கல்லை அதன் மீது வைத்து, ஒத்தடம் கொடுத்துவர குணமடையும்.

 

10.  மலக்கட்டு - 20 மி.லி. சிற்றாமணக்கு எண்ணெயில் 3 - 5 துளி எருக்கன் பால் விட்டுக் கொடுக்க மலச்சிக்கல் தீரும்.

 

11.  வயிற்றுப் பூச்சி -: சிறு குழந்தைகளுக்கு வயிற்றில் கீரிப்பூச்சி, கொக்கிப் புழு இருந்து கொண்டு வயிற்று வலியை உண்டாக்கும். 5 கிராம் தேனில் 3 துளி எருக்கு  இலைச் சாறு விட்டு மத்தித்துக் கொடுக்க புழுக்கள் வெளியேறும்.

 

12.  காது நோய் - : எருக்கன் இலைச் சாறு 50 மி.லி.கலந்து வைக்கவும். இதில் வசம்பு, பெருங்காயம், இலவங்கம், பூண்டு வகைக்கு 5 கிராம் அளவு போட்டு காய்ச்சி வடித்து வைக்கவும். இதனைச் சொட்டு மருந்தாகக் காதில் விட, காதில் சீழ் வடிதல், குருதி கசிதல், காதில் எழுச்சியினால் வரும் வலி ஆகியன குணமாகும்.

 

13.  குட்டநோய் -: எருக்கு இலையும். வேர் பட்டையும் சம அளவில் உலர்த்திய பொடி 2-3 கிராம் பசு வெண்ணெயில் கலந்து நாளும் இரு வேளை 48-96 நாள் சாப்பிட குட்ட நோய் குணமாகும், யானைக்கால் வியாதியும் குணமாகும். உப்பில்லாமல் பத்தியம் இருத்தல் வேண்டும். புளி காரம் எதுவும் கூடாது. தயிர் பால் மோரில்தான் சாப்பிடவேண்டும். இப்பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து புண்ணுக்குத் தடவ குணமடையும்.

 

14.  காக்கை வலிப்பு -: எருக்கன் இலையில் வெட்டுக்கிளி எச்சமிட்டிருக்கும். அத்துடன் இலையை எடுத்து உலர்த்திய பொடி 30 கிராம், மிளகுத்தூள் 30 கிராம், த்தாமணி இலைத்தூள் 30 கிராம் சேர்த்து வைக்கவும். இந்த சூரணத்தை மூக்கில் நசியமிட பொடி போடுவது போல் உறிஞ்ச காக்கை வலிப்பு வராது.

 

15.  பல்வலி -: எருக்கன் பூ 100 கிராம் , உப்பு 10 கிராம் சேர்த்து அரைத்து வடைபோல் தட்டி உலர்த்தி புடமிட்டு சாம்பலாக்கி அரைத்தால் சிறந்த பற்பொடி கிடைக்கும். இதில் பல் துலக்கினால் பல்சொத்தை, புழு, பல்லரணை, பல் கூச்சம் யாவும் குணமடையும்.

 

16.  ஆஸ்த்துமா -: வெள்ளெருக்கன் பூ 100 கிராம், மிளகு 50 கிராம், இலவங்கம், குங்குமப்பூ, கோரோசனை வகைக்கு 10 கிராம் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாகச் செய்து உலர்த்தி வைக்கவும். காலை, மாலை ஒரு மாத்திரை தேனில் சாப்பிட்டு வந்தால் 48-96 நாளில் ஆஸ்த்துமா, ழுப்பு, இரைப்பு, இருமல், காசம், ஜன்னி குணமடையும்.

 

17.  வாதவலி, வீக்கம் - : எருக்கம் பால் வாதக் கடிகளைக் கரைப்பதன்றி வாத நோய், சந்நிபாதம் ஐவகைவலி இவற்றைப் போக்கும்.

 

18.  ஒரு தேக்கரண்டி அளவு நல்லெண்ணெயில் 7 துளி எருக்கம் பாலை விட்டு நன்றாய்க் குலுக்கி நாசிக்குள் 2-3 துளி விட அளவு கடந்த தும்மல் உண்டாகும். சிரசிலுண்டான நீரையெல்லாம் வெளிப்படுத்தும். காக்கை வலிக்குச் சிகிச்சை செய்யும் போது முதலில் இச்சிகிச்சை செய்வதினால் மூளையை அனுசரித்த சீதளத்தை அகற்றும் அந்தத் தும்மலை நிறுத்த வேண்டுமாயின் முகத்தில் நீரால் அடித்துக் குளிர்ந்த நீரைக் கொண்டு நாசியைச் சுத்தப் படுத்த வேண்டும்.

 

19.  எருக்கன் பூவால் முறை சுரம், பிநசம் சுவாசகாசம், கழுத்து நரம்பின் இசிவு ஆகியவை நீங்கும்.

 

20.  எருக்கன் பூவிற்குச் சமனெடை மிளகு சேர்த்து மெழுகு போல அரைத்து இரண்டு குன்றிமணி அளவுக்கு மாத்திரைகள் செய்து நிழலில் உலர்த்திக் கொண்டு தினம் 2 வேளை ஒவ்வொரு மாத்திரை வீதம் கொடுத்துவர முறை சுரம் நீங்கும்.

 

21.  5 பலம் ஆவின் நெய்யில் 10-12 எருக்கம் பூவைப்போட்டுக் காய்ச்சி வடித்தெடுத்து வேளைக்கு அரை அல்லது ஒரு தோலா வீதம் கொடுக்க சுவாச காசம், நீர்ப்பீநிசம் போகும்

 

22.  எருக்கம்பூ 2, நொச்சி இலை 50 கிராம், மருதாணி இலை 50 கிராம் ஆகியவற்றை எடுத்து மைய அரைத்து சொத்தை நகத்தின் மீது வைத்துக் கட்டினால் சொத்தை சரியாகும்.(316)

 

23.  எருக்கம் பூ மொட்டை (மலராத மொட்டு) எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கசக்கி அதிலிருந்து வரும் சாறில் இரண்டு மூன்று துளிகளைக் காதில் விட்டால், காது வலி சரியாகும். (066)

 

24.  எருக்கஞ் செடியின் பிஞ்சு இலைகள் இரண்டு அல்லது மூன்று எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் பாம்புக் கடி விஷம் இறங்கிவிடும். (880)

 

25.  எருக்க இலையின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணலில் காட்டி சற்று சூடேற்றி கட்டிகள் மீது வைத்துக் கட்டினால், கட்டிகள் பழுத்து உடையும்.(571)

 

26.  எருக்கு இலைச் சாறு மூன்று துளிகள் எடுத்து 10 துளிகள் தேனில் கலந்து உள்ளுக்குக் கொடுத்தால் (பெரியவர்களுக்கு மட்டும்) வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்..(674)

 

27.  எருக்கஞ் செடியின் வேரை எடுத்து மை போல் அரைத்து பாம்பு கடித்த இடத்தில் பூசினால் விஷம் இறங்கும். (867)

 

28.  எருக்கங் காயினைக் கசக்கி அதிலிருந்து வரும் சாறினை இரண்டு சொட்டுகள் காதில் விட்டால், காது வலி நீங்கும்.(057)

 

29.  எருக்கம் பாலை எடுத்து நாய் கடித்த இடத்தில் சில சொட்டுகள் விட்டால் நாய்க்கடி விஷம் முறியும். (884) (901) (1795)


30. எருக்கின் ஒரு வகையான வெள்ளெருக்கம் பூ , மிளகு, இலவங்கம் ஆகியவற்றை 2 : 1 : ½ என்ற விகிதத்தில் சேர்த்து அரைத்து மிளகு அளவு உருண்டைகள் ஆக்கி, வேளைக்கு இரண்டு வீதம் சாப்பிட்டு வந்தால் மூச்சுத் திணறல், ஆஸ்துமா சரியாகும்.(1085)


===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க ! 

=================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

=================================================

எருக்கு

எருக்கங்காய்