இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

கறிவேப்பிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கறிவேப்பிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 மே, 2021

கறிவேப்பிலை

 

            மூலிகைப்பெயர்...........................................கறிவேப்பிலை

            மாற்றுப் பெயர்கள்...............கருவேப்பிலை, கறபிஞ்சா

            தாவரவியல் பெயர்......................................Murraya koenigii

            ஆங்கிலப் பெயர்....................................................Curry Leaf

            சுவை.....................................................................சிறு கார்ப்பு

            தன்மை........................................................................வெப்பம்

 

 

===================================================

1)    கொத்தான மாற்றடுக்கில் அமைந்த நறுமணமுள்ள இலைகளையும், உச்சியில் கொத்தான வெள்ளை நிற மலர்களையும், உருண்டையான பச்சை நிறக் காய்களையும, கரிய நிறப் பழங்களையும் உடைய சிறு மரம். (Asan)

 

2)    இம்மரத்தின் இலை, ஈர்க்கு, பட்டை, வேர் ஆகியவை மருத்துவக் குணமுள்ளவை.(Asan)

 

3)    கறிவேப்பிலையில் நார்ச்சத்து, வைட்டமின்”, “பி”, “பி-2”, “சி”, புரதம், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து, குளோரின், தாமிரச் சத்து, மெக்னீஷியம் போன்றவை அடங்கியுள்ளன. (Asan)

 

4)    சமையலுக்கு மணமூட்டியாக கறிவேப்பிலை தாளிப்புக்குப் பயன்படுகிறது.  (Asan)

 

5)    இதனை மருந்தாகப் பயன் படுத்துவதால் பசி மிகும். தாது பலம் பெருகும். வயிற்றில் வெப்பமுண்டாகி  வாயுவைத் தொலைக்கும்.(Asan)

 

6)    இலை சிறிதளவு, மிளகாய் இவற்றை நெய்யில் வதக்கிப் பழம்புளி, வறுத்த உப்பு சேர்த்து துவையலாக்கி முதல் கவளத்தில் பிசைந்து உண்ணக் குமட்டல், வாந்தி, செரியாமைப் பேதி, சீதபேதி, செரியா மாந்தம், வயிற்றுக் கோளாறு  ஆகியவை தீரும்.(Asan)

 

7)    கறிவேம்பு ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு ஆகியவை வகைக்கு ஒரு பிடி, சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம், அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு ஒரு முடக்கு வீதம் 4 வேளைக் கொடுக்க சளி, இருமல், சுரம், வாத சுரம் தீரும். (Asan)

 

8)    ஒரு பிடி இலையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து கோலிக்குண்டு அளவு வெறும் வயிற்றில் 45 நாள்கள் கொடுக்கப் பித்த மிகுதியால் வந்த பிதற்றல் பைத்தியம் தீரும்.(Asan)

 

9)    கறிவேப்பிலைப் பொடியுடன் சிறிது சர்க்கரைப் பொடி கலந்து காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர நீர்க்கோவை, சூதக வாய்வு தீரும்.(Asan)

 

10)   இலையை நிழலில் உலர்த்தி, இத்துடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றைப் பொடியாகி சோற்றில் கூட்டி, கொஞ்சம் நெய் விட்டு கலந்து உண்ண மந்தம், மந்தபேதி, மலதோடம், மலக்கட்டு, கிரகணி, பிரமேகம் இவை சாந்தமாகும். (Asan)

 

11)   கறிவேப்பிலை ஈர்க்குடன் வேப்பீர்க்கு, நெல்லி ஈர்க்கு சேர்த்து, இடித்து, நீர் விட்டுக் காய்ச்சிக் கொடுக்க , வாந்தி உடனே நிற்கும்.(Asan)

 

12)   தினமும் கறிவேப்பிலையை அரைத்து உணவுடன் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை தெளிவடையும். கண்ணாடி அணிய வேண்டியதில்லை..(Asan)

 

13)   தொடர்ந்து 21 நாள்கள் காலை மாலை என இருவேளைகள் 10 கறிவேப்பிலைக் கொத்துகளின் சாறினை எடுத்து உட்கொண்டு வந்தால் நீரிழிவு குறையும்.(Asan)

 

14)   சிறிதளவு கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்று உப்புசம், குமட்டல், வாந்தி மறையும்.(Asan)

 

15)   சிறிதளவு கறிவேப்பிலையை அரைத்து வெறும் வயிற்றில், வெந்நீரில் அருந்தினால் கொழுப்பு கரையும்.(Asan)

 

16)   கறிவேப்பிலைச் சாறுடன் ஏலப்பொடி கலந்து பருகி வந்தால் சிறுநீரகப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும்.(Asan)

 

17)   கறிவேப்பிலைப் பொடியைத் தினமும் இருவேளை தலா ஒரு தேக்கரண்டி வீதம் தேன் கலந்து உட்கொண்டு வந்தால் சளி முறியும்.(Asan)

 

18)   கறிவேப்பிலைக் குச்சிகள் கொண்டு பல் துலக்கினால் ஈறுகள் வலிமை அடையும். பற்கள் வெண்மை பெறும்.(Asan)

 

19)   கறிவேப்பிலைச் சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் வயிற்றுப் போக்கு நிற்கும்.(Asan)

 

20)   கறிவேப்பிலைப் பொடியை வெந்நீர் அல்லது பாலில் கலந்து பருகி வந்தால் இரத்த சோகை நீங்கும். (Asan)

 

21)   பேரீச்சம் பழத்துடன் சிறிதளவு கறிவேப்பிலையை அரைத்த விழுதைச் சேர்த்து உட்கொண்டு வந்தால் இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும்.(Asan)

 

22)   கறிவேப்பிலைப் பழங்களை அரைத்து எலுமிச்சம் பழச் சாறு கலந்து, பூச்சி கடித்த இடங்களில் தடவலாம். நிவாரணம் கிடைக்கும்.(Asan)

 

23)   கறிவேப்பிலையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து மோர் கலந்து 48 நாட்கள் பருகினால் சித்தப்பிரமை நீங்கும்.(Asan)

 

24)   கறிவேப்பிலையும் பொட்டுக் கடலையும் சமபங்கு கலந்து பொடித்து, நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் உடலில் எடை கூடும்.(Asan)

 

25)   கறிவேப்பிலையை அரைத்து சாறெடுத்து, அதே அளவு தேங்காய் எண்ணெயில் கலந்து ஈரப்பதம் நீங்கும் வரைக் காய்ச்சி, தலைக்குத் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும்.(Asan)

 

26)   சிறிதளவு சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, மிளகு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.(Asan)

 

27)   கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை எடுத்து அரைத்துச் சாறெடுத்துப் பருகினால் செரிமானப் பிரச்சினை தீரும். அல்லது சோற்றுடன் கறிவேப்பிலைப் பொடி கலந்து, சிறிது நெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டாலும் செரிமானப் பிரச்சினை தீரும்.(Asan)

 

28)   கறிவேப்பிலைப் பொடியை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்து வந்தால் இளநரை மாறும்.(Asan)

 

29)   உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றில் தலா 25 கிராம் எடுத்து ஒன்றாகச் சேர்த்து, பெண்கள் சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சி அடையும்..(Asan)

 

30)   கறிவேப்பிலையை நன்கு அரைத்து, நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து, தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் நீண்ட கேசத்தைப் பெறலாம்.(Asan)

 

31)   கறிவேப்பிலை சாறு, சீயக்காய், தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி,  மூன்றையும் எடுத்து கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்த பின் குளித்து வந்தால் கரு கரு கூந்தலைப் பெறலாம்.(Asan)

 

32)   இரத்த சர்க்கரையை 42 விழுக்காடும், இரத்தக் கொழுப்பை 30 விழுக்காடும் கறிவேப்பிலை குறைக்கிறது.(Asan)

 

33)   (ஆதாரம்:- நாகர்கோயில், எஸ். மகாலிங்க ஆசான் 06-11-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)

 

34)   கறிவேப்பிலையை துவையல் செய்து தினமும் உணவுடன் சேர்த்து வந்தால் உடல் வளர்ச்சி அடையும். கண் பார்வை தெளிவடையும். தாது விருத்தி அடையும்.(044) (802)

 

35)   கறிவேப்பிலை, மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து வெந்நீர் ஊற்றி அரைத்து அருநெல்லிக்காயளவு குழந்தைகளுக்கு குளிப்பாட்டியவுடன் கொடுத்தால் மந்தம் குறையும். பசியைத் தூண்டும். (274)

 

36)   கறிவேப்பிலைப் பொடியுடன் சிறிது சர்க்கரைப் பொடி கலந்து காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் நீர்க்கோவை, வாய்வு ஆகியவை தீரும் .(324)

 

37)   கறிவேப்பிலை, ஆவாரம் பூ, நெல்லிக்காய்  ஆகியவற்றை பொடியாகவோ குடிநீராகவோ சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.. (334)

 

38)   கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் ஒரு தம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, ஆறவைத்து வடிகட்டி அருந்தி வந்தால் செரியாமை குணமாகும். (666)

 

39)   கறிவேப்பிலை, வெங்காயம், வெள்ளைப் பூண்டு கிராம்பு ஆகியவற்றை பொடிதாக அரிந்து, சீரகம் கருஞ்சீரகம் இரண்டையும் பொடி செய்து, அத்துடன் சேர்த்து தயிருடன் கலந்து பருகி வந்தால் வயிற்று உப்பிசம் சரியாகும் .(700)

 

40)   கறிவேப்பிலையை அரைத்து தேங்காயெண்ணெயில் கலந்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி, வடிகட்டி,  தலைக்குத் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாகவும், கறுப்பாகவும் வளரும் .(909)

   =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )01]

{15-05-2021}

==================================================


கறிவேப்பிலை


கறிவேப்பிலைத் தோட்டம்

கறிவேப்பிலைப் பூ

கறிவேப்பிலைப் பழம்


கறிவேப்பிலை